அமைச்சரவை அறிக்கைக்கு எதிராக நனோ நைட்ரஜன் உரங்கள் இறக்குமதி - சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு
இலங்கையின் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை அறிக்கைக்கு எதிராக நனோ நைட்ரஜன் உரங்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக, ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக்குற்றச்சாட்டை இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது சுமத்தியுள்ளார்.
விவசாய அமைச்சர், இந்தியாவில் இருந்து நனோ உரத் தொகுதி, இலங்கையின் கொமர்ஸ் பேர்டிலைசஸ் லிமிடெட் ஊடாக இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்று யோசனையை முன்வைத்தார்.
எனினும் அமைச்சரவை ஒப்புதலுக்கு மாறாக, இந்திய உர நிறுவனத்தின் முகவர் என்று கூறப்படும் தனியார் நிறுவனம் மூலம் இந்தியாவில் இருந்து உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
இந்தநிலையில் அமைச்சரை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பின்னர் எப்படி மாறியது என்பதை இந்த நாட்டு மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் இந்த இந்திய நிறுவனம் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை அரசாங்கம் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஹந்துன்நெந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் திறைசேரி குறித்த தனியார் நிறுவனத்துக்கு உரத்துக்காக 1.257 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அரச நிதி எவ்வாறு நேரடியாக தனியார் நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.