பொதுமக்களுக்கு கல்முனை பிரதேச செயலகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை ,மருதமுனை, நற்பிட்டிமுனை, பெரியநீலவணை, ஆகிய பிரதேச வியாபாரிகளின் நிறுவை/அளவை உபகரணங்களை 2024/2025 ஆம் ஆண்டுக்கு சரிபார்த்து முத்திரை பதிப்பதற்கென கடந்த திங்கள் (12) முதல் 13,14 ,15 வரையான 04 நாட்கள் இச்செயற்பாடுகள் கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி அறிவித்துள்ளார்.
எனவே குறித்த வர்த்தகர்கள் மீனவர்கள் தங்களுடைய வியாபார அளவை நிறுவை உபகரணங்களை கொண்டு சென்று முத்திரையிட்டுக் கொள்ளுமாறு கல்முனை பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
இலத்திரனியல் தராசுகள்
இதன் போது இலத்திரனியல் தராசுகள் பாரம்பரிய தராசுகள் நிறுக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவீட்டுடன் கூடிய தராசுகள் சரி பார்க்கப்பட்டு சீல் செய்யப்பட்டு தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் தராசுகளின் வகைகளுக்கேற்ப தராசுகள் இனங்காணப்பட்டு இச்செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதுடன் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் இதில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் இன்றி பல வியாபாரிகள் மோசடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது தொடர்பிலும் மக்களினால் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே அளவீட்டு தராசுகளுக்கான தரச் சான்றிதழ்களை 1995 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகளும் நியமங்களும் மற்றும் சேவைகளும் சட்டத்தின் பிரகாரம் 2024/ 2025 ஆம் ஆண்டிற்கான நிறுக்கும் அளக்கும் உபகரணங்கள் பரீட்சித்து முத்திரையிடல் என்பதுடன் மேற்குறித்த சட்டத்தின் 37 ஆவது பிரிவின் படி முன்பின்னாக 12 மாத கால இடைவெளியில் முத்திரையிடாது நிறுவைகள் பாவித்தல் அல்லது வெளிக்காட்டிவைத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் என அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |