ஜெய்சங்கரிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வழங்கிய முக்கிய ஆவணம்..
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கரிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசியமைப்பு உருவாக்கச் செயற்பாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிடத்தில் கூட்டமைப்பின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய வரைவின் பிரதியொன்றை கையளித்துள்ளார்.
கொழுப்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே சம்பந்தன் குறித்த ஆவணத்தினை கையளித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கருத்து வெளியிடுகையில்,
2021ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் விடயங்களில் அதிக கரிசணை கொண்ட அயல்நாடான இந்தியாவின் முக்கிய இராஜதந்திரியான இந்திய வெளிவிவகார அமைச்சரை முதலாவதாக சந்தித்துள்ளோம்.
அவர் கூட்டு அறிக்கையில் வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பில் எமது வரவேற்பினையும், நன்றிகளையும் தெரிவித்தோம்.
இந்தியாவின் கரிசணை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்த தீர்வினை ஏற்படுத்துவதற்கான கருமத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றும் கோரினோம்.
எமது மக்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் நாம் அவருடன் பேசினோம். அவருடனான எமது சந்திப்பு மிகத் திருப்திகரமாக அமைந்துள்ளது. நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.