முல்லைத்தீவில் காணி விடுவித்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணி பிரச்சினை தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று (06.02.2024) காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணி பிரச்சினைகள் தொடர்பில் துறைசார்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது .
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களை விடுவித்தல் தொடர்பாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நந்திக்கடல், கொக்கிளாய், நாயாறு, சுண்டிக்குளம் ஆகிய இடங்களிலும் மக்கள் பாவனைக்கு காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் வடமாகாண அபிவிருத்தி செயலணியின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன்,வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சமந்தி,மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சி.குணபாலன், அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், காணிக்கிளையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.



