முல்லைத்தீவில் நிகழும் திட்டமிட்டலற்ற மணல் அகழ்வு பாராமுகமாக அதிகாரிகள்
முல்லைத்தீவு தியோகு நகர் ப பகுதியில் கட்டுப்பாடற்ற முறையில் எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் கடற்கரை மணல் அகழப்பட்டு வருகின்றது.
கரையோரமாக உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்திற்கு வெளியே உள்ள வீதியின் ஓரமாக உள்ள நிலத்தில் இந்த மணல் அகழ்வு நிகழ்ந்து வருகின்றது.
இந்த பாதையின் வழியே கடற்கரை மணலோடு வெள்ளை மணலும் (பூச்சு மண்) இருப்பதால் மண் அகழ்வு கட்டுப்பாடற்ற அதிக கேள்வியுள்ள பகுதியாக இருந்து வருகின்றது.
பாதைக்கு ஏற்படும் சேதம்
வீதியின் ஓரமாக மணல் அகழப்படுவதால் நாளடைவில் நிலத்தில் ஏற்படும் சாய்வுச் சிதைவுகளினால் பாதைக்கு போடப்பட்டுள்ள கிரவல் சிதைவுக்குள்ளாகி பாதை மணலாகிவிடும் ஆபத்து இருக்கின்றது.
கடலோடு வெள்ள நீர் கலக்கும் இடமும் நீரோடும் பாதையும் வெள்ளை மணல் உள்ள பகுதி ஊடாக செல்வதால் திட்டமிடப்படாத மண் அகழ்வானது அந்த இட அமைவின் இயற்கை அமைப்பினை சிதைத்து விடும்.
அதிகாரிகள் அக்கறையினமாக இருக்கின்றனர்
திட்டமிடலற்ற முறையில் மண் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. அதனை ஒழுங்குபடுத்தி திட்டமிடலற்ற அகழ்வுகளால் ஏற்படும் சேதங்கள் பற்றி கருத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.
அதிகாரிகள் கண்காணிப்புக்களில் ஈடுபட்டால் பொருத்தமற்ற மண் அகழ்வுகளை தவிர்க்கலாம் என பெயர் குறிப்பிட விரும்பாத தியோகு நகர் வாசியொருவர் குறிப்பிட்டார்.
கடற்கரை ஓரமாக முல்லைத்தீவை தூண்டாய் வடக்குடன் இணைக்கும் பாதையின் ஓரமாகவே இந்த மணல் அகழ்வு நடைபெறுகின்றது.
தொடர்புபட்ட அதிகாரிகள் மணல் அகழ்வுகளை உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
