முல்லைத்தீவில் சட்டவிரோத மணல் அகழ்வு: நேரில் சென்ற பிரதேச செயலாளர்
கண்டாவளையில், பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்து சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து கண்டாவளை பிரதேச செயலாளர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த பகுதியில், மணல் மாபியாக்கள், கனரக வாகனங்களை பயன்படுத்தி சட்ட
விரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்
கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில் 3 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை அழைத்து அமைச்சர் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
டக்ளஸின் வாக்குறுதி
இந்நிலையில், குறித்த பகுதிக்கு நேற்று (31.01.2024) பிற்பகல் சென்ற கண்டாவளை பிரதேச செயலாளர், கள நிலைமைகளை கண்காணித்ததுடன், சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை, கிராம சேவையாளர், கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்ட விரோத மணல் அகழ்வுக்கு 10 நாட்களுக்குள் நிரந்தர தீர்வை அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா பெற்று தருவதாக கூறியுள்ள நிலையிலேயே கண்டாவளை பிரதேச செயலாளர் இவ்வாறு கூறியுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கை
அதேவேளை, குறித்த பகுதி இரணைமடு குளத்தின் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியை மிக அண்மித்து காணப்படுவதால், எதிர்காலத்தில் மிகப் பெரிய அனர்த்தங்களையும், பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பனை அபிவிருத்தி கூட்டுறவு சபையால் அமைக்கப்பட்ட சுற்றுமதிலும் இதனால் பாதிக்கப்பட்டு விழுந்துள்ளதாக அந்த சபையின் பணியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுற்றாடல் மற்றும் இடர் ஏற்படும் வகையில் அபாயகரமாக உள்ள குறித்த பகுதியை பாதுகாக்க அனைவரும் விரைந்து செயற்பட வேண்டும் என கண்டாவளை பிரதேச மக்களும், விவசாயிகளும் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
