ஊரடங்கு சட்ட நேரத்தில் சுற்றுலா விடுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை பயன்படுத்தி சுற்றுலா விடுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த சம்பவமொன்று மட்டக்களப்பு - கல்லடியில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 11.30 மணியளவில் கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பண்டார தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது மட்டக்களப்பு வாவியூடாக படகுகளின் மூலம் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனை இடம்பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் பேரில் குறித்த சுற்றுலா விடுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 73 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.