அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 46 பேர்
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கையர்களை கைது செய்துள்ள அந்நாட்டு கரையோர பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.
இரண்டு சிறுவர்கள் உட்பட 46 பேரும் சிலாபத்தை சேர்ந்தவர்கள்
நாடு கடத்தப்பட்டவர்கள் சிலாபம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்களில் 5 வயதுக்கும் குறைந்த இரண்டு சிறார்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான ஏ.எஸ்.வை 978 என்ற சிறப்பு விமானத்தில் கோகோஸ் தீவில் இருந்து இன்று காலை 8.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இந்த இலங்கையர்களுடன் 100க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியா பாதுகாப்பு பிரிவினரும் வந்திருந்தனர்.
இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். இவர்கள் நாடு கடத்தப்பட்டவர்களை பெறுப்பேற்று விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
வாக்குமூலங்களை பதிவு செய்த குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர்
இதனையடுத்து இலங்கையர்கள் விமான நிலையத்தின் தேசிய புலனாய்வுப சேவையின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள், நாடு கடத்தப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதுடன் அவர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.