நாட்டில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்
யாழ்.மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்தவர் மானிப்பாய் பொலிஸாரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நீண்ட காலமாக வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் அவரை
முற்படுத்தவுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை புகையிரத நிலைய பிரதேசத்தில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் 67 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து சுமார் 37600 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.