அவசரகாலச்சட்டம் நீடிப்புக்கு தமிழரசுக்கட்சி கடும் எதிர்ப்பு
அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
அத்தியாவசிய சேவைகள்
“அத்தியாவசிய சேவைகள் மக்களுக்குத் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும். மக்களுக்கு இதனை வழங்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமையாகும். அதற்காக அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

தேசிய மக்கள் சக்தியினர் எதிரணியில் இருந்தபோது, அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனை எதிர்த்தே வாக்களித்து வந்தனர். ஆனால் தற்போது அந்தச் சட்டம் நீடிக்கப்படுகின்றது. எனவே, அந்தச் சட்டம் நீடிக்கப்படுவதை நாம் ஏற்கவில்லை. அதனைக் கடுமையாக எதிர்க்கின்றோம் என்றார்.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
இந்த விவாதத்தின் இறுதியில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் வழங்கப்பட்டன. இதற்கமைய, அவசரகாலச் சட்டம் நீடிப்பு தொடர்பான தீர்மானம் 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.