3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர
இறுதிக் கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மூன்று லட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் மீண்டும் போர் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் தற்போதைய அரசாங்கம் ஏற்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போரை வெற்றிகொண்ட படைவீரர்களை நினைவு கூர்வதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
முழுப் பொறுப்பும் அரசாங்கத்தினுடையது..
முல்லைத்தீவில் நடத்தப்பட்ட இவ்வாறான ஓர் நிகழ்விற்கு அரச தரப்பில் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் பெண் என்றாலும் முல்லைத்தீவு பிரதேச செயலாளர் இந்த நிகழ்வில் பங்கேற்றார் எனவும் அதற்கு நன்றி பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், முல்லைத்தீவில் பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு ஆயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றனர் எனவும் அதற்கு எவ்வித தடையும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினையாகும் எனவும் பிரபாகரன், தற்கொலைக் குண்டுதாரிகள் போன்றவர்களை கொண்டாடுவதன் மூலம் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாவதனை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கி போர் ஏற்பட்டால் அதன் முழுப் பொறுப்பினையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
விஜய்க்கு எழுதப்பட்ட கடிதம்
தமிழக முதல்வர் விஜய்க்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் இனவழிப்பு தினத்தை பிரகடனம் செய்யுமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாகவும், உண்மையில் தமிழர் இனவழிப்பினை தடுத்தது அரசாங்க படையினரே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட போரின் போது பிரபாகரன் மூன்று லட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு லட்சத்து 95000 பணயக் கைதிகளை மீட்டு போரை வெற்றிகொண்ட எந்தவொரு இராணுவமும் உலகில் கிடையாது என தெரிவித்துள்ளார்.
போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற அரசியல்வாதிகள் எதனையும் செய்யவில்லை என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO