இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
இந்தியா-தமிழ்நாடு எஸ்பி பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட இலங்கை ரூபாவில் சுமார் இருபது கோடி ரூபா பெறுமதியான 1500 கிலோ ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் பட்டிணம் அருகே வைத்து தனியார் பேருந்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுளதுடன் சந்தேகத்தின் பெயரில் தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, சந்தேகநபர்களை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக இராமேஸ்வரம் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐஸ் மீட்பு
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக ஐஸ் போதை பொருள் கடத்தப்பட இருப்பதாகவும், ஐஸ் போதைப்பொருள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் தனியார் பேருந்தில் கொண்டுவர இருப்பதாகவும் ராமநாதபுரம் சுங்கத்துறை துணை ஆணையாளருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையான மீமிசல், எஸ்பி பட்டினம், தொண்டி, மோர் பண்ணை, தேவிபட்டினம், காரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
விசாரணை
இதன்போது, மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து தொண்டி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றை எஸ்பி பட்டினம் அருகே வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேருந்துக்குள் சோதனை செய்தபோது பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழே கேட்பாரற்ற நிலையில் கிடந்த பை ஒன்றை எடுத்து சோதனை செய்தபோது அதில் ஐஸ் போதை பொருள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஐஸ் போதை பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பேருந்தில் இருந்த பயணிகளிடம் அந்த பை குறித்து விசாரித்த போது யாரும் அந்த பைக்கு உரிமை கோராததால் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இருவரையும் ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.