மருத்துவராகி கிராம மக்களுக்கு இலவச சேவையினை வழங்குவேன் - மாணவி தரண்யா சூரியகுமார்
மருத்துவராகி பின்தங்கிய கிராமமான தச்சங்குளம் மக்களுக்கு இலவசமாகச் சேவையினை வழங்குவதே எனது இலட்சியமாகும் என வவுனியாவில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி தரண்யா சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி உயிரியல் பிரிவில் வவுனியா - இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி தரண்யா சூரியகுமார் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 148ஆவது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவர் தனது வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் ஓர் வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது இலட்சியமாகும். நான் வசிக்கும் பின்தங்கிய கிராமமான தச்சங்குளம் கிராம மக்களுக்கு இலவசமாகச் சேவையினை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மேலும் எனது கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்துச் செல்கின்றேன்.
கோவிட் - 19 காரணமாகப் பாடசாலை, பிரத்தியேக வகுப்புக்கள், கற்றல் நடவடிக்கைகள் இடையில் நிறுத்தப்பட்டன. இருந்த போதிலும் இணைய வசதியூடாகவும், முன்னர் கற்றவற்றினை மீள கற்றதன் மூலமே, நான் இந்த பெறுபேற்றினை அடையக் காரணம்.
எனவே எதிர்வரும் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களும் கோவிட் - 19 காரணத்தினை முன்னிறுத்தி கற்றல் நடவடிக்கையினை முடிவுறுத்தாது மேலும் இணையம், கற்றவற்றினை மீட்டல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தால் சிறந்த பெறுபேற்றினை அடைவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
குறித்த திறமைச் சித்திகளை பெறுவதற்குக் காரணமாகவிருந்த குடும்பத்தினர், பாடசாலை
அதிபர், ஆசிரியர்கள், உறவினர்கள், சக நண்பர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.