தற்போதைய அரசாங்கத்திற்கு ஆசீர்வாதங்களை வழங்குகின்றேன்
ஊழல் அரசியல்வாதிகளுக்கு அதிகபட்ச தண்டனையை நடைமுறைப்படுத்தும் தற்போதைய அரசாங்கத்திற்கு தனது ஆசீர்வாதங்களை வழங்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தைக் கவிழ்க்க ஏதேனும் ஒரு குழுவோ அல்லது அமைப்போ முயற்சித்தால் அதனை ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாட்டிற்குத் தேவைப்படுவது நாட்டை நேசிக்கும் ஒரு எதிர்க்கட்சியே தவிர, தற்போதுள்ள எதிர்க்கட்சி ஒரு கேலிச்சித்திர எதிர்க்கட்சி என சரத் பொன்சேகா விமர்சித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஐந்து வருட காலத்திற்கு ஆணை வழங்கியுள்ளனர். அந்த மக்கள் ஆணையின் கீழ் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் அதிகபட்சமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நாங்கள் அரசாங்கத்திற்கு ஆசீர்வாதம் வழங்குகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க யாராவது முயற்சித்தால் அதனை நாம் அனுமதிக்க மாட்டோம். இவர்களுக்கு இந்த ஐந்து வருட காலத்தை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதன் பின்னர் இவர்களைத் தொடர்ந்து வைத்திருப்பதா அல்லது வேறு ஒரு குழுவை ஆட்சிக்குக் கொண்டு வருவதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் ஒரு சிறந்த வேலைத்திட்டங்களாகவே தென்படுகின்றன என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.