எம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை! உயிரிழந்த பிரியந்தவின் சகோதரர் உருக்கம் (Video)
உலகில் உள்ள அனைவருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை இருக்க வேண்டும். உலகில் எங்கும் இவ்வாறான துயரச் சம்பவங்களை சகித்துக்கொள்ள முடியாது என பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சகோதரர் கமல் குமார தெரிவித்துள்ளார்.
தனது சகோதரரின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கமல் குமார இதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் தற்போது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பிரதான சந்தேக நபர் உட்பட 235 பேர் சியால்கோட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 900 பேருக்கு எதிராக ஆரம்பகட்ட விசாரணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் உயிரிழந்த பிரியந்தவின் சகோதரர் மேலும் குறிப்பிடுகையில்,
அண்ணனை இழந்துவிட்டோம். என்ன இருந்தாலும் மனித வாழ்வு மீள முடியாதது, அதனால் உலகில் எங்கும் இது நடக்கக்கூடாது. உலக மக்கள் தங்கள் சொந்த எண்ணங்களுடன் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. இனியும் இப்படி ஒரு கொடூரம் இடம்பெறாமல் இருக்க நாம் முயற்சி செய்வோம் என உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.