முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு தடை விதிக்கப்பட்டமை குறித்து தெரியாது
முன்னாள் இராணுவத் தளபதிகள் மூவரும் ஏனைய சிலருக்கும் பிரித்தானிய அரசாங்கம், தடைகள் விதித்துள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பாக, தமக்கு எதுவும் தெரியாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஆராய்ந்து விரைவில் கருத்து தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட சில இலங்கை பிரஜைகளுக்கு எதிராக பிரித்தானிய அரசு தடைகள் விதித்துள்ளதாக கூறப்படும் விவகாரம் குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.
தமக்கு இந்த விடயம் பற்றி தெரியவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். "நான் இதைப் பற்றி பார்க்கிறேன், பின்னர் தகவல் தருகிறேன்.
எனக்கு இதைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. நான் ஆய்வு செய்து பின்னர் சொல்கிறேன்.
இது இப்போது வந்த செய்தியாக இருக்கலாம்," என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
