வெளிநாடுகளிலிருந்து ஒரு சதத்தைக் கூட நான் கடனாகப் பெற்றுக்கொள்ளவில்லை: கோட்டாபயவின் அறிவிப்பு
நான் ஒரு சதமேனும் வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொண்டதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொனராகல சியம்பலாண்டுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன்களுக்காக ஆண்டுதோறும் 6.3 பில்லியன் டொலர் செலுத்த நேரிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
எதிர்க்கட்சிகள் உண்மையான தகவல்களை மக்களுக்கு வழங்குவதில்லை. எனது இரண்டாண்டு ஆட்சியில் நான் ஒரு சதமேனும் வெளிநாட்டுக் கடன் பெற்றதில்லை.
கடந்த அரசாங்கங்களினால் பெற்றுக்கொண்ட 6.3 பில்லியன் கடன்தொகையை ஒவ்வொரு ஆண்டும் செலுத்த நேரிட்டுள்ளது.
அபிவிருத்தி அல்லது வேறு காரணிகளுக்காக இவ்வாறு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையை நாம் ஆண்டு தோறும் செலுத்த நேரிட்டுள்ளது.
கோவிட் காரணமாக சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானம் பாரியளவில் குறைந்துள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பினை பேணும் நோக்கில் சில ஆடம்பர பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்தினோம் எனவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.