மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ள கணவன்! மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் நபரொருவர் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (07.10.2022) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
60 வயது பெண் உயிரிழப்பு
சம்பவத்தில் ஆரையம்பதி மாவிலந்துறையைச் சேர்ந்த 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயாரான நவரெத்திணம் சோதிமலர் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கணவன், மனைவியை பிரிந்து கடந்த ஒரு மாதகாலமாக கல்லாறு பிரதேசத்தில் இருந்துள்ள நிலையில் நேற்று அவரை தேடி மனைவி சென்று சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கணவன் தப்பியோடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை முன்னெடுப்பு
இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



