ஈஸ்டர் தாக்குதல் பற்றி பேசுவோரை வேட்டையாடும் அரசு: ஐ. மக்கள் சக்தி
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறியவதற்கு பதிலாக, அது பற்றி பேசும் நபர்களின் வாய்களை மூடுவது அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக மாறியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண (Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை சட்டத்திற்கு முன்னால் கொண்டு வருவதாக கூறி, ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், அது பற்றி பேசும், குற்றம் சுமத்தும் நபர்களை வேட்டையாட ஆரம்பித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக அரசாங்கம் நடத்தும் விசாரணைகள் மீது மக்களுக்கு எள்ளவும் நம்பிக்கையில்லை. இதன் காரணமாக சர்வதேச மட்டத்திலான விசாரணைகளை எதிர்க்கட்சி கோருகிறது.
அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக மேடைகளில் பேசிய பிரதான தலைப்பு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல். அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை சட்டத்திற்கு முன்னால் கொண்டு வருவதாக கூறினார்கள்.
தற்போது சட்டத்திற்கு முன்னால் கொண்டு வரப்படுபவர்கள், சூத்திரதாரிகளா, குற்றம் சுமத்துவோரா என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை சம்பந்தமாக பேசும் எதிர்க்கட்சியினர், மதகுருமார் என அனைவருக்கும் பாடம் கற்பிக்கும் தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அதிகமாக பேச வேண்டாம் பேசினால் நடக்க போவது என்ன என்ற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மதகுருமாரை அழைத்து 20 மணி நேரத்திற்கு மேல் வாக்குமூலம் பெறுகின்றனர். நாள் கணக்கில் அலைய விடுகின்றனர். சிறில் காமினி ஆண்டகை சாதாரண மதகுரு அல்ல. அவர் கத்தோலிக்க திருச் சபையின் ஊடகப் பேச்சாளர். பொலிஸார் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று இது பற்றி விசாரித்திருக்கலாம்.
அந்த அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கோ, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கோ செல்லவில்லை.
இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக உண்மையை அறிந்தவர்கள் மீண்டும் முன்வருவார்களான என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறியும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை.
இந்த தாக்குதல் பற்றி பேசுபவர்களின் வாய்களை மூடும் தேவையே உள்ளது எனவும் ஹர்சன ராஜகருண குறிப்பிட்டுள்ளார்.