ஈழத்தமிழன் யோகராசா நவநாதன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
திருச்சி சிறப்பு முகாமில் கடந்த முதலாம் திகதியிலிருந்து இன்றுவரை தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஈழத்தமிழரான யோகராசா நவநாதன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமக்கு இதுவரை சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சென்னையில் உள்ள அதிகாரி ஒருவரிடம் நான் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நீதிமன்ற உத்தரவுடன் என்னை விடுதலை செய்யுங்கள். வெளியில் இருந்து வழக்கை நான் பார்க்கின்றேன் என்று தெரிவித்தேன்.
கோரிக்கை
நான் ஓடிவிடுவேன் என்று என்னை அடைத்து வைத்திருப்பதாக அவர் கூறினார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள் என்று கூறினேன். அதற்கும் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது. நான் உண்ணாவிரதம் இருந்து எனது உடல் நிலை மிக மோசமாகி விட்டது.

ஒருவேளை எனது உடலிற்கு ஏதாவது நேர்ந்தால், உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் என்னுடைய உடலை தமிழ்நாடு அரச மருத்துவக் கல்லூரியில் ஒப்படைத்து விடுங்கள்.
இலங்கைக்கு எந்தக் காரணம் கொண்டும் அனுப்பி விடாதீர்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.