சுதந்திர தினம் எமக்கு கரிநாளே! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு
எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
எதிர்வரும் சுதந்திர தினத்தை கரி நாளாகவே நாம் கடைப்பிடிக்கவுள்ளோம்.அன்றைய தினம் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டங்கள் திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்தவகையில், நான்காம் திகதி காலை 9 மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
குறித்த போராட்டத்திற்கு பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசியத்திற்காக பாடுபடுகின்ற அனைவரும் ஒற்றுமையாக கலந்துகொண்டு நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் எமது போராட்டத்தை மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது உறவுகள் கிடைக்கும் வரைக்கும் சுதந்திர தினத்தை துக்க தினமாகவே நாங்கள் கடைப்பிடிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.