இலங்கையில் கொலையுண்ட தமிழக மீனவர்? கேள்வியெழுப்பும் முக்கியஸ்தர்
இலங்கையின் பிணக்கூறாய்வின் அறிக்கையை திமுக அரசு அப்படியே ஏற்றுக்கொள்கிறதா? ராஜ்கிரண் கடலில் விழுந்தார் என இலங்கை சொல்வதை ஏன் தமிழக அரசு மறுபேச்சு பேசாமல் ஏற்கிறது என்பதற்கான பதிலை திமுக சொல்லவேண்டும் என மனித உரிமைப் பாதுகாவலரும் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் பக்கத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார்.
அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்,
கொலையுண்ட மீனவர் ராஜ்கிரண் நேற்று புதைக்கப்பட்டார். அவரது உடல் வந்து சேர்ந்த 1 மணி நேரத்திற்குள்ளாக இது நடந்தது. அவரது வீட்டிற்கு இறுதி மரியாதைக்காக எடுத்துச் செல்வது பொலிஸாரால் தடுக்கப்பட்டது. அவரது முகம் காட்டப்படவில்லை.
சவப்பெட்டியில் இருப்பது அவர் உடல்தானா என எவருக்கும் தெரியாது. உடலைக் கரை சேர்க்கும் பொழுது சட்டத்துறை அமைச்சர் இருந்தார்.
பிரேத பரிசோதனை செய்யாமல் எப்படி உடல் புதைப்பதற்கு அனுமதித்தார் என்பதை அவர் விளக்கவேண்டும். இலங்கையின் பிணக்கூறாய்வின் அறிக்கையை திமுக அரசு அப்படியே ஏற்றுக்கொள்கிறதா? ராஜ்கிரண் கடலில் விழுந்தார் என இலங்கை சொல்வதை ஏன் தமிழக அரசு மறுபேச்சு பேசாமல் ஏற்கிறது என்பதற்கான பதிலை திமுக சொல்லவேண்டும்.
கொலை செய்யப்பட்டதற்கான அனைத்து அடையாளங்களும் தெரிந்த பின்னரும் பிணகூறாய்வு நடத்த ஏன் திமுக தயாராகவில்லை? ஏன் கொலை வழக்கைப் பதிவு செய்யவில்லை? மீனவர் மீதான கொலையைத் தடுக்க கொலைவழக்கினை இலங்கை ராணுவம் மீது பதிவு செய்வதில் துவங்குகிறது.
அப்படியெனில் ஏன் அதை அதிமுக அரசு தவிர்த்ததைப் போல திமுகவும் தவிர்க்கிறது? இந்த குறைந்தபட்ச நடவடிக்கையை எடுக்க எது தடுக்கிறது? எப்படி இனிமேலும் கொலைகளைத் தடுக்கப்போகிறது? இந்திய அரசினை நோக்கி கடிதம் எழுதுவது மட்டுமே 35 ஆண்டுகால சம்பிரதாயம் தொடர்கிறது என்பதைத்தவிர வேறில்லை.
இந்திய அரசை நோக்கிய கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்காதது ஏன்? கோட்டைப்பட்டிணம் வந்த அமைச்சர் கைது செய்ததாகச் சொல்லப்பட்டு அதற்குரிய ஆதாரங்கள் இல்லாமல் இருக்கும் காணாமல் போன 2 மீனவர் குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை.
தன் கணவனும், தன் மகனும் காணவில்லை, அவர்கள் நிலை பற்றிய விவரங்களை யாரும் சொல்லவில்லை என அழுது கொண்டிருக்கும் குடும்பத்தினரை அமைச்சர் சந்திக்காமல் சென்றது ஏன்? அதிமுக அரசு அறிவித்த 10 லட்சம் என்பதை அறிவிப்பது மட்டும் எப்படி நீதியாகும்? எப்படி ஆட்சி மாற்றமாகும்? சமூகநீதியாகும்? கோட்டைப்பட்டிணத்தில் போராட்டத்தை பாஜகவும், காவல்துறையும் மட்டுமே கட்டுப்படுத்தியதைக் காணமுடிந்தது. பாஜகவைத் தவிர வேறு யாரும் பேசுவதை காவல்துறை அனுமதிக்கவில்லை.
பாஜகவை வைத்து எங்களைப் போராட்ட அரங்கிலிருந்து 2 நாட்களாய் காவல்துறை அப்புறப்படுத்த முயன்றது. காவல்துறை இன்றும் பாஜக கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த மீனவர் படுகொலைக்கும் நீதி கிடைப்பது தடுக்கப்பட்டிருக்கிறது. இக்கொலை திட்டமிட்டு விவாதமாக்கப்படவில்லை.
மிகக் கவனமாக ஊடகங்கள் இதை விவாதிக்க மறுத்திருக்கின்றன. பொதுச்சமூகமும் மீனவத் தொழிலாளிகளின் மீது நிகழ்த்தப்படும் படுகொலையை விவாதிக்காமல் கள்ளமௌனத்துடன் கடந்து செல்லவிரும்பியது.
இப்போராட்டம் இத்தோடு முடிந்துவிடவில்லை. இலங்கை சிறையில் இருக்கும் 23 மீனவர் நிலை பற்றிய முதல்வர் கேள்விக்குப் பிரதமர் பதில் சொல்லவில்லை. கொலை பற்றி முதல்வர் கடிதத்திற்கு வெளியுறவு அமைச்சர் பேசவில்லை. இதைப்பற்றி திமுகவினரும் பதில் கேள்வி எழுப்பவில்லை.
எதிர்க்கட்சியான அதிமுக இருக்கும் சுவடும் தெரியவில்லை. சிறைப்படுத்தப்பட்ட மீனவர் விடுதலைக்கு நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். மீனவர் கொலையை நிரந்தரமாகத் தடுக்க மாநில அரசுகள் 35 ஆண்டுகளாகத் தோல்வியடைந்திருக்கிறது.
புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசின் அணுகுமுறைகளும் கடந்த அரசுகளைப் போலவே உள்ளது. இலங்கையை நெருக்கடிக்குள்ளாகாத தமிழக அரசின் செயல்பாடும், இலங்கை அரசின் படுகொலை போக்கை ஊக்குவிக்கும் இந்திய அரசின் செயல்பாடும் எவ்வகையிலும் பொதுச் சமூகத்தால், ஊடகத்தால் கேள்வி எழுப்பப்படாத நிலையில் இப்படுகொலைகள் மேலும் தொடரும் வாய்ப்பினை இலங்கை அரசிற்கு அளித்துள்ளது.
இந்நிலையை மாற்ற மக்கள் போராட்டமே தீர்வு. இந்நிலையின் இந்நிலையின் காரணமாகவே மீனவர் அமைப்புகள் அக்டோபர் 29ம் திகதி சாலை மறியல் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
மே 17 இயக்கம் இலங்கை தூதரகத்தை இதன் காரணமாகவே முற்றுகையிட்டது, மேலும் மூன்று நாட்கள் கோட்டைப்பட்டினத்தில் மே17 இயக்கமும், விடுதலைத் தமிழ்ப்புலிகள் அமைப்பும் , சி.பி.எம், மமக, SDPI, மஜக, தமிழ்புலிகள், தோழர் குடந்தை அரசன், அரங்க குணசேகரன், கே.எம்.சரீப் உள்ளிட்டோர் மக்களுடன் நின்று போராடினார்கள்.
இப்போராட்டத்தை மேலும் தொடர்வோம் எனத் தெரிவித்துள்ளார்.