உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாகும் ஹவுதி தாக்குதல்: எண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம்
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் காசா போர் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஆரம்பகட்டத்தில் இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இருப்பினும் 2024 ஜூலை மாதத்தில் டெல் அவிவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ஹவுதி ட்ரோன் (Drone) நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டது பாதுகாப்பு வளையத்தில் உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தியது.
ஏவுகணைத் தாக்குதல்
தற்போது 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஹவுதிகள் மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் இன்று ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்து அழித்ததாகத் தெரிவித்துள்ளது. இந்த இராணுவத் தாக்குதல்களை விடவும், செங்கடல் பகுதியில் ஹவுதிகள் கப்பல்கள் மீது நடத்தும் தாக்குதல்களே உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
2023 முதல் 2025 வரை சுமார் 200 கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதால், செங்கடல் வழியாக நடைபெறும் போக்குவரத்து 50% வரை குறைந்தது.
எண்ணெய் ஏற்றுமதி
தற்போது 2026 மார்ச் மாத நிலவரப்படி, ஈரானுடனான மோதலால் ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள நிலையில், ஹவுதிகள் பாப் அல்-மண்டப் பகுதியிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சவுதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியை யான்பு துறைமுகம் வழியாக மாற்றினாலும், அவை ஏமன் கடற்கரையைக் கடந்துதான் ஆசிய சந்தைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இந்த இரண்டு முக்கிய கடல்வழிப் பாதைகளும் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் சரக்கு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சர்வதேச அளவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.