மண்மேடு சரிந்து விழுந்ததில் பாரிய சேதமடைந்த வீடு: ஹட்டனில் சம்பவம் (Video)
ஹட்டன் பகுதியில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில், வீட்டின் மீது மண்மேடு இடிந்து விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் ஹட்டன் - திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேக்கிலி தோட்டத்தில் இன்று (05.07.2023) காலை இடம்பெற்றுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, வீட்டில் யாரும் இல்லாததன் காரணமாக உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் வீட்டுப் பொருட்கள் அனைத்தும் முழுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சீரற்ற காலநிலை
பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கான நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவும் திம்புள்ள - பத்தனை கிராம அதிகாரிகள் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். இந்த அனர்த்தம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








