மத்திய மலை நாட்டில் சீரற்ற காலநிலை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (Video)
மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, ஹட்டன்- கொழும்பு, ஹட்டன்- நுவரெலியா, மஸ்கெலியா- நல்லதண்ணீர், மற்றும் தியகல- நோட்டன் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதுடன் பல இடங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வான் கதவுகள் திறக்கப்படலாம்
நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான் அளவினை எட்டியுள்ளன.
இதனால் மேலும் மழை அதிகரிக்கும் பட்சத்தில் வான் கதவுகள் திறக்க வேண்டிய நிலை ஏற்படுவதனால் நீர்தேக்கங்களுக்கு கீழ் தாழ்நில பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை நீர் வீழ்ச்சிகளிலும், நீர் நிலைகளிலும் நீராடுவதையும், நீர் வீழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக அருகில் செல்வதையும் தவிர்த்து கொள்ளுமாறு பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
தேயிலை உற்பத்தி வீழ்ச்சி
கடும் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக பெந்தோட்டங்களில், தொழிலாளர்கள் வேலைக்கு வரும் எண்ணிக்கை குறைந்துள்ளன. இதனால் பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளதாக பெருந்தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமன்றி ஹட்டன் கல்வி வலயத்தில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய கல்வி வலயங்களிலும் மாணவர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் கடும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து மின் கம்பிகளில் வீழுந்ததன் காரணமாக பொகவந்தலா, தலவாக்கலை, ஹட்டன் உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |