யாழில் சுகாதார சீர்கேடான முறையில் கொத்து தயாரித்த உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து ரொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரித்த உணவக உரிமையாளருக்கும், மற்றுமொரு உணவகத்தில் மலசல கூடத்தினுள் மின் மோட்டாரை இயக்கி, நீர் வழங்கி வந்த நபருக்கும் எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சீல் வைப்பு
குறித்த வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற போது உரிமையாளர்கள் இருவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதை அடுத்து , சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டமும், மலசல கூடத்தினுள் மின் மோட்டாரை இயக்கிய உரிமையாளருக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கடையினை சீல் வைத்து மூடுமாறும் பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளையிடப்பட்டது.
எனவே, நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் குறித்த உணவகம் பொது சுகாதார பரிசோதகரால் சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |