ஏ9 வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் ஏ9 வீதியிலிருந்து இன்று அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பளை நகரப்பகுதிக்கு அருகில் ஏ9
வீதியில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர்.
உடனடியாக அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பு விடுத்து பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குறித்த நபர் இறந்து பல மணி நேரமாகி விட்டதாக கடமையில் உள்ள வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இறந்தவர் பளை முல்லையடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளந்திரையன் என்பவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை சடலம் தற்பொழுது பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.