ஹொரண வங்கி கொள்ளை: மூன்று இளம் பெண்களிடம் விசாரணை!
ஹொரண பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் மூன்றரை கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறி நாடகமாடிய வங்கியின் உதவி மேலாளருடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று இளம் பெண்களிடம் விசாரணை நடத்த பொலிஸ்புலனாய்வு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
சந்தேக நபரான வங்கி அதிகாரி இந்த இளம் பெண்களுக்காக அதிகளவில் பணத்தைச் செலவிட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி, இரகசியமான முறையில் பல பெண்களுடன் பழகி, அவர்களின் உல்லாச வாழ்க்கைக்காக எல்லையற்ற முறையில் பணத்தை வாரி இறைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த நபர் பெருமளவில் கடன் சுமையிலும் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கண்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவர் பல முக்கிய தகவல்களை மறைத்து வருவதாக மேல் மாகாண வடக்கு பொலிஸ் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வங்கி உதவி மேலாளர் மற்றும் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான வங்கி அதிகாரி, 6 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் பொலிஸாரினால் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri