உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் கடமையாற்றும் அனைத்து அதிகாரிகளின் விடுமுறைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் குறித்த பிரதேசங்களில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி விசேட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் ,வீதி தடைகளை ஏற்படுத்தவுள்ளனர்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் பணிகளுக்காக மாத்திரம் செல்வோர் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி வழங்கப்படும். மாகாணங்களுக்கு இடையிலான அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
மாகாண எல்லைகளை நடத்து வருவோர் அத்தியாவசிய பணிகளுக்கான பெறுமதி ஆவணங்கள் அல்லது சரிபார்க்கப்பட்ட குறுஞ்செய்திகளை எல்லையில் பணியில் இருக்கும் அதிகாரிகளிடம் காண்பித்து உள்ளே செல்ல அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பயணங்கள் விடுமுறைகள் அல்லது ஏனைய செயற்பாடுகளுக்காக மாகாண எல்லைகளை கடந்து செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்தவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த உத்தரவுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.