மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் தற்கொலை செய்து கொண்டார் என்று வரலாற்றை மாற்றிவிடுவார்கள்!
2005ம் ஆண்டு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து நத்தார் ஆராதனையின் போது ஜோசப் ஐயா தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று எதிர்காலத்தில் வரலாறுகளை மாற்றிவிடுவார்களோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் லோ.தீபாகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜோசப் பரராஜசிங்கத்தின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து நத்தார் தினமன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற திருப்பலி ஆராதானையின் போது 2005ம் ஆண்டு இனந்தெரியாத நபர்களினால் இவர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.
படுகொலைசெய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலி முன்னணியின் ஏற்பாட்டில், அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா உயிர் நீத்த 15வது ஆண்டு நினைவுமட்டக்களப்பில் ஆளுமை மிக்க தலைவரை இழந்து வேதனையான நினைவு நிகழ்வில் நிற்கின்றோம்
யாழ்பாணத்தில் 1934 நவம்பர் 26ம் திகதி பிறந்த ஜோசப் பரராஜசிங்கம் ஐயா கிழக்கு மாகாணத்தில் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் முடித்து மட்டு மண்ணில் நாடாளுமன்ற உறுப்பினராக வாழ்ந்ததுடன் வடக்கு கிழக்கிற்கு இணைப்பு பாலமாகவும் திகழ்ந்தார்.
கடந்த 2005ம் ஆண்டு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து நத்தார் ஆராதனையின் போது ஜோசப் ஐயா தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று சமூக ஊடகங்களில் சில கருத்துக்களை காணக்கிடைத்தது.
வருங்காலத்தில் வரலாற்றை மாற்றி விடுவார்களோ என ஐயம் ஏற்படுகின்றது. 2005 இவர் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து சந்தேகத்தின் பெயரில் பலரை கைது செய்தனர்.
நீதிக்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை அதற்கான நீதி கிடைக்காதது வேதனையான விடயம்.
எம்மைப் போன்ற பல இளம் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக இவர் வாழ்ந்ததுடன், இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராக செயலாற்றி எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் முன்னின்று உழைத்த தலைவர்களுள் இவரும் ஒருவர்.
இவர் படுகொலை செய்யப்பட்ட பின் தமிழ்த் தேசிய விடுதலைக்காக அறவழியில் போராடிய அன்னாருக்கு மாமனிதர் விருது வழங்கப்பட்டது.
கிழக்கில் இருந்த ஆளுமைமிக்க தலைவர்களை, ஊடகவியலாளர்களை, கல்விமான்களை கடத்தி காணாமல் ஆக்கிவிட்டு கொலை செய்து விட்டு அச்சுறுத்தி வடக்கு கிழக்கு பிரதேச வாதம் கதைத்து என்ன பயன் கண்டீர்கள்? எவ்வாறு தலைவர்கள் உருவாகுவார்கள்? சிந்தித்து பாருங்கள்.
நாம் இங்கு இவரை பற்றி சுட்டிகாட்ட வேண்டிய விடயம் ஆரம்பத்தில் ஆங்கில ஆசிரியராக தமது சமுக பணியை ஆரம்பித்த இவர் அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர், தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவியார் பெயரில் (திருமதி சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர இவர் எழுதிய கட்டுரைகள் பல அப்பகுதியில் மிகவும் பிரசித்தமானவை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்திரிகையாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதிலும் முன்னின்றவர் இவர். அந்த அமைப்பின் ஆரம்பத் தலைவரும் இவரே என்பதுடன் பல மொழியறிவில் தேர்ச்சி பெற்றவர் என்பதில் ஐயமில்லை.
மட்டக்களப்பில் 90ம் ஆண்டு இடம் பெற்ற பல தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் சர்வதேத்திற்கு கொண்டு சென்ற ஒரே ஒரு தலைவர்.
இது இவரின் சாணக்கிய அரசியலையும், மொழி பாண்டித்தியத்தையும் காட்டுகின்றது
குறிப்பாக படுவான்கரை பெருநிலத்தில் கடந்த 1991 ஜூண் 12ம் திகதி மகிழடித்தீவில் இடம்பெற்ற படுகொலையை சர்வதேச ரீதியாக வெளிக்காட்டியது மட்டுமன்றி அதற்கான ஒரு ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கத்தால் அமைப்பதற்கு அழுத்தம் கொடுத்தவரும் இவரே
இங்கு எம்மத்தியில் எழும் கேள்வி இவர் படுகொலை செய்யப்படும் அளவிற்கு என்ன தவறுசெய்தார்? தமிழ் மண்ணை நேசித்தது குற்றமா? தமிழ் மக்களை நேசித்தது குற்றமா?
இவ்வாறான மறைந்த தலைவர்களின் வரலாறுகள் தியாகங்கள் இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும். எமது கட்சி மாத்திரம் தான் கட்சி வளர்ச்சிக்கும், மக்கள் சேவைக்காகவும் பல தியாகங்களுக்கு அப்பால் உயிரையும் தியாகம் செய்கின்றனர்.
இவ்வாறான ஒரு மாமனிதரை இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியால் கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் இதே நத்தார் நாளில் இருந்து நாம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.
எதிர்கால எமது அரசியல் இருப்புக்காகவும், நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும், உயிர் நீத்தவர்களை நாம் நினைவுகூருவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
அவரை போன்று எம் மண் விடியலுக்காக உயிர்நீத்த அனைவரையும் நாம் நினைவுகூரும் போது அவர்களின் தியாத்தின் பதிவுகள் எமது இளைய சந்ததிகளுக்கு வரலாற்றை மீட்பதற்கு ஒரு வாய்பாக அமையும்” என கூறினார்.



