பலத்த பாதுகாப்புடன் கண்டிக்கு கொண்டு செல்லப்பட்ட ஹிசாலினியின் உடலம்
தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிசாலினியின் உடலம் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கண்டி - பேராதெனியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பு வீட்டில் சிறுவர் உரிமை சட்டத்தை மீறி தொழிலுக்கு அமர்த்தப்பட்ட நுவரெலியா டயகம மேற்கு தோட்ட சிறுமியான ஜூட்குமார் ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 15.07.2021 அன்று உயிரிழந்தார்.
இச்சிறுமியின் இறப்புக்கு பின் அவரது உடல் கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டு சவப்பெட்டி முற்றாக மூடப்பட்ட நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிறுமியின் மரணத்தில் தமக்கு சந்தேகம் இருப்பதாக சிறுமியின் பெற்றோர் அறிவித்திருந்த நிலையில் புதைக்கப்பட்ட உடலம் இன்றைய தினம் காலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
உடலம் அடங்கிய பேழையை சரியாக 12.20 மணிக்கு பாதுகாப்பாக குழியிலிருந்து மீட்டனர். அங்கு போடப்பட்டிருந்த மேசையில் சடலம் வைக்கப்பட்டு சவப்பேழை கதவு அகற்றப்பட்டு உடலம் அடையாளம் காணப்பட்டது.
உடலத்தை அடையாளம் காட்ட விடுக்கப்பட்ட நீதிமன்ற அழைப்புக்கு அமைய சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்கள் வருகை தந்து சடலத்தை நீதவான் முன்னிலையில் அடையாளம் காட்டினர்.
இதையடுத்து சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.