பொலிஸாரை கட்டிப்பிடித்தற்காக குற்றம் சுமத்தப்படுகிறது - ஹிருணிகா பிரேமச்சந்திர
“பொலிஸ் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடித்ததற்காக தன்மீது குற்றம் சுமத்தப்படுகின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின், மகளிர் பிரிவு அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தான் பொலிஸ் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்கின்றபோது, அவர்கள், ஒருபோதும், தம்மை விலகிப் போக கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
"எங்களுக்கு இருக்கும் அதே பிரச்சனைகள் அவர்களுக்கும் உள்ளன. பொலிஸார் தடியடி மற்றும் பிற ஆயுதங்களுடன் வருகிறார்கள் என்றால், நாங்கள் அவர்களை அமைதியான முறையில் தடுக்க முயற்சிக்க வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நெவில் டி சில்வா
முன்னதாக, கறுவாத்தோட்ட பொலிஸின் அத்தியட்சகர் நெவில் டி சில்வா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, பொது மக்கள் போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகளை கட்டிப்பிடிப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒரு தந்திரோபாயமாக இருந்ததாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
பல சந்தர்ப்பங்களில் ஹிருணிகா பிரேமச்சந்திர, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை கட்டிப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும், இது அவரது குற்றவியல் நடத்தை முறை என பொலிஸார் நம்புகின்றனர் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை (14.11.2022) கொழும்பு 7இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல குற்றங்களைச் செய்தமைக்காக கைது செய்யப்பட்ட 15 சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே பொலிஸின் அத்தியட்சகர் நெவில் டி சில்வா, இதனை தெரிவித்தார்.