இலங்கையின் பல பகுதிகளில் கடும் சுழல் காற்று - மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் சுழல் காற்றும் வீசும் அபாயம் உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டுடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
