நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றில் இன்று விசாரணை
நாடாளுமன்றத் தேர்தல் (Parliament Election) எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறுமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை இன்று (04) உயர்நீதிமன்றம் முன்னெடுக்கவுள்ளது.
அரசமைப்பில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்துக்கும் வாக்களிப்பு நடைபெற வேண்டிய தினத்துக்கும் இடையில் உள்ள காலம் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் காலக் கணக்குக்கு ஒரு நாள் முன்னதாக தற்போது நாடாளுமன்றத் தேர்தல் திகதியிடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மனு மீதான விசாரணையே இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
தீர்மானம் அரசமைப்புக்கு எதிரானது
இந்த விடயம் சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழு தனது அவதானிப்பு அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்துள்ளது.

இதனைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியதோடு, சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் தனது சமர்ப்பணத்தை இன்று செய்யவுள்ளார்.
முன்னதாக, எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசமைப்புக்கு எதிரானதென உத்தரவிடுமாறு கோரி சிவில் செயற்பாட்டாளரும் நாம் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளருமான எச்.எம்.பிரியந்த ஹேரத் கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதித் தினம்
இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அதன் அங்கத்தவர்கள் உட்பட்டோர் பெயரிடப்பட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு சட்டத்தின் 10 ஆவது விதந்துரைக்கமைய வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்காக ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதிவரையான காலப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் முதல் ஐந்து வாரங்களுக்கு குறையாத, ஏழு வாரங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்குள் தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார்.

அதன்படி, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதித் தினமான ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார காலம் நவம்பர் 15ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அதேபோல் ஒக்டோபர் 11 முதல் ஏழு வார காலம் நவம்பர் 29ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நவம்பர் 14ஆம் திகதி அந்த சட்ட எல்லைக்குள் இல்லை என்று மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரை அறிவுறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனற்றுப் போனதால், மக்களின் இறைமையும் நாட்டின் அரசமைப்பும் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டமைக்கு எதிரான உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றில் மேலும் கோரியிருந்தார்.
குறிப்பிட்ட கால அவகாசம்
இவ்வாறான நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை வாக்களிப்பைத் தீர்மானிப்பதற்குப் பதிலாக வழமை போன்று சனிக்கிழமையன்று 16ஆம் திகதிக்கு அதனை நடத்த ஒழுங்குபடுத்தி இருந்தால் அது அரசமைப்பு குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்குவதாக இருந்திருக்கும் எனவும் அந்த மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவம்பர் 15ஆம் திகதி பௌர்ணமி தினம் என்பதால் அரச விடுமுறை நாளாகும். ஆகையால் அடுத்த நாள் 16ஆம் திகதி தேர்தலை நடத்த இணக்கம் வரலாம் என்று உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக இணக்கம் ஏற்பட்டால் இரண்டு நாட்கள் தேர்தல் பிற்போடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri