சீனாவிடமும் அமெரிக்காவிடமும் சரணடைந்த இலங்கை! பசிலால் ஏற்பட்ட வினை - எதிர்கட்சி சாட்டையடி
அரசாங்கம் நாட்டின் மின் மற்றும் எரிசக்தி ஆகியவற்றின் ஏகபோக அதிகாரத்தை தமக்கு நட்பான நாடுகளுக்கு வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பசில் ராஜபக்ச என்ற அமெரிக்க பிரஜை, அவரது வாழ்க்கைக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நாட்டின் மின் மற்றும் எரி சக்தி அதிகாரத்தை தனக்கு நட்பான நாடுகளுக்கும் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
இலங்கைக்கு எரிபொருளை விநியோகிப்பது சம்பந்தமான சகல முடிவுகளும் எதிர்காலத்தில் இந்திய எண்ணெய் நிறுவனமே எடுக்கும். அத்துடன் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் அமெரிக்க நிறுவனம் மின் உற்பத்தியை ஆரம்பித்த பின்னர் மின்சார விநியோகம் தொடர்பான தீர்மானங்களை அமெரிக்காவே எடுக்கும்.
இலங்கை தற்போது ஒரு தோட்டாவை கூட எதிர்கொள்ளாமல் அமெரிக்காவுக்கு சரணடைந்துள்ளது. ஒரு வெடி குண்டை கூட எதிர்கொள்ளாமல் நாடு சீனாவிடம் சரணடைந்துள்ளது.
எவ்விதமான பயங்கரவாத செயல்களும் இன்றி இலங்கை இந்தியாவின் கைப்பாவையாக மாறியுள்ளது எனவும் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.