நாடாளுமன்றத்தின் முக்கிய குழுவில் இருந்து விலகுவதாக ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கோப் குழுவில் இருந்து விலகுவதற்கு சுயாதீனமான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் சஜித்தின் அறிவிப்பு
இதேவேளை இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவும் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வெற்றிடத்திற்கு பேராசிரியர் சரித ஹேரத்தை முன்மொழிய எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
27 பேர் கொண்ட கோப் குழுவை சபாநாயகர் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
கோப், கோபா குழு உறுப்பினர்கள் நியமனம்
இந்த நிலையில் புதிய கோப் குழு குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் ஹேரத், தனது பெயரை உள்ளடக்காமைக்கு அரசாங்கத்தை குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், ஆளும் தரப்பிலிருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு நியமிக்கப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் விமல் வீரவன்ச குற்றசாட்டுக்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
I am resigning from COPE at #SriLanka @ParliamentLK to pave way for @charith9 sacked by @RW_UNP government controlled by @PodujanaParty. As chair of Com on Public Fin I have my hands full as I am transforming COPF and establish Parliament Budget Office.
— Harsha de Silva (@HarshadeSilvaMP) October 4, 2022