சிறுமியை வெளிநாட்டுக்கு அனுப்பியவருக்கு கடூழிய தண்டனை
ஜோர்தானுக்கு வயதுக் குறைந்த சிறுமியை வீட்டு வேலைக்காரராக அனுப்பியதற்காக 59 வயதுடைய நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியாக இனங்காணப்பட்டவர், தனது பாட்டியுடன் வசித்து வந்த சிறுமிக்கு போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், தீர்ப்பை வெளியிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 25,000 அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்டவருக்கு 300,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
நஷ்டஈட்டை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.
குற்றப்பத்திரிகை
இதற்கிடையில், வெளிநாடு சென்ற இரண்டு மாதங்களுக்குள் குறித்த சிறுமி, அவர் பணிபுரிந்த வீட்டுக்காரர்களால் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், பின்னர் 2008இல், அவர் இலங்கைக்குத் திரும்பியதாகவும் நீதிபதி சுட்டிக்காட்யுள்ளார்.
குறித்த சிறுமி, திரும்பி வராவிட்டால், மத்திய கிழக்கில் தூக்கிலிடப்பட்ட ரிசானா நஃபீக்கிற்கு ஏற்பட்ட அதே கதியை அவரும் சந்தித்திருக்கலாம் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கல்முனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான இந்தக் குற்றப்பத்திரிகை, சிறுமி தொடர்பாக நடத்தப்பட்ட 9 வருட விசாரணைகளைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |