ரஞ்சனுக்காக முக்கிய அரசியல் தீர்மானத்தை எடுக்க தயாராகும் ஹரின்
ரஞ்சன் ராமநாயக்கவுக்காக தான் முக்கிய அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க தயாராக இருப்பதாகவும் அது தொடர்பான சவாலை அடுத்த மாத முதல் வாரத்தில் அரசாங்கத்திடம் முன்வைக்க உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று கம்பஹாவில் நடத்திய பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வெள்ளிக் கிழமை நான் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. சிறிய வைபவம் ஒன்றுக்காக நான் பதுளைக்கு சென்றிருந்தேன். மாத்தறையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இருக்கின்றார். நான் ரஞ்சனுக்காக கறுப்பு சால்லை அணிந்து நாடாளுமன்றத்திற்கு சென்றேன்.
ரஞ்சனுக்காக நேருக்கு நேர் போராட முதுகெலும்பு இருக்கின்றதா எனவும் ரஞ்சனை காப்பாற்ற முடியும் எனவும் அவர் கேட்கிறார். இவர்கள் சிறையில் அடைக்கும் போது நான் எப்படி காப்பாற்ற முடியும்?. நான் இன்று ஒன்றை கூறுகிறேன், ரஞ்சன் ராமநாயக்கவுக்காக நான் பெரிய அரசியல் தீர்மானத்தை எடுப்பேன்.
அரசாங்கத்திற்கு அந்த சவாலை ஏற்க முடியுமா என்பதை பார்ப்போம். நான் அதனை இப்போது கூற மாட்டேன். மே மாதம் முதல் வாரத்தில் நான் அரசாங்கத்திற்கு சவால் ஒன்றை விடுப்பேன். முடிந்தால் அரசாங்கத்தினர் அதனை செய்யட்டும்.
அப்போது எனது முதுகெலும்பு என்ன என்பதை மீண்டும் ஒரு முறை இலங்கை மக்களுக்கு காட்டுவதற்கு தயார் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கிறேன். ரஞ்சன் செய்த குற்றம் என்ன?. தம்பி இவர்கள் அனைவரும் திருடர்கள் என கூறியது குற்றமா?.
கொலை செய்தவன் நாடாளுமன்றத்தில் இருக்கின்றான். கொலை செய்தவர்களுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சுகபோக வாழ்க்கை. ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட செல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட அனுமதி வழங்காது, ரஞ்சனை கழிவறைகளை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்தியுள்ளனர். என் தாய், தந்தைகளே இதனை செய்தவர்கள் மீது இடி விழாதா? எனவும் ஹரின் கேள்வி எழுப்பியுள்ளார்.