கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு அறிவுறுத்தல்?
2021 அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அளவிடப்பட்ட படிமுறைகளில் கோவிட் கட்டுப்பாடுகளை தளரத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோவிட் பணிக்குழு நேற்று கூடி நிலைமைகள் குறித்து ஆய்வு செய்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயோர்க்கில் நடக்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளமையால், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கியுள்ளார்.
இந்த கூட்டத்தின் போது, கோவிட் கட்டுப்பாடுகளை அகற்றி, நாட்டை படிப்படியாக திறப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தனவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் நேற்றைய கூட்டத்தில், சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு, எதிர்வரும் இரண்டு மாதங்களில் குறைந்தது 200,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வேலைத் திட்டத்தை முன்வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், இறப்புகளைக் குறைக்கவும் 2021, ஆகஸ்ட் 21 அன்று அரசாங்கம் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கோவிட் நிலைமை குறித்து கருத்துரைத்துள்ள சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத், உறுதியான ஒன்றைச் சொல்வது கடினம் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே தடுப்பூசி போட்டாலும் பொது மற்றும் சமூக சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
இது தலைக்கவசம் அணிந்து உந்துருளியில் செல்வது போன்றது என்று குறிப்பிட்டார். தலைக்கவசம் அணியும்போது, விபத்தில் தலையில் ஏற்படும் காயத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
ஆகவே தலைக்கவசம் அணிவது என்பது விபத்துகளைத் தடுப்பதல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.