ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மீளாய்வு: அநுரவிடம் ஐரோப்பிய ஒன்றியக் குழு உறுதி
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில்கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவுக்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே சார்ல்ஸ் வைட்லி இவ்வாறு கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, வர்த்தக ரீதியான பல வெற்றிகளை அடைய உதவியுள்ளது என்றும், தொடர்ந்தும் வர்த்தக வெற்றிகளை அடைய இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.பி. பிளஸ்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தரப்படுத்தப்பட்ட மற்றும் தரமான பொருட்களை விநியோகிக்க இலங்கைக்கு மேலும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்க, கருத்தில் கொள்ளப்படும் அளவுகோல்கள் தற்போதைய அரசின் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் வைட்லி குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை அல்லது பொதுவான விருப்பத்தேர்வு முறை தொடர்பான 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.