டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் மாபெரும் போராட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி செய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த டயகமவை சேர்ந்த சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம் பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்துள்ளது.
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், யாழ்ப்பாணம் மாநகரசபை மேயர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், மகளிர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.