இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜாவுரிமை வழங்கி வைப்பு
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(05.03.2024) இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்கள் அகதிகளாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
பிரஜாவுரிமை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடு
இந்நிலையில். அவர்கள் அங்கு வசித்து வந்ததோடு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் மீண்டும் நாட்டை வந்தடைந்தனர்.
இதற்கமைய நாட்டிற்கு வந்த இந்தியாவில் பிறந்த, இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜாவுரிமை பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்ததுடன், கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களையும், அரச உதவித் திட்டங்களையும் பெற முடியாத நிலை காணப்பட்டது.
இதனை அடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுசரனையில் அரசு சார்பற்ற நிறுவனமொன்றின் பங்களிப்போடு இவர்களுக்கான பிரஜாவுரிமை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக 22 வயதுக்கு மேற்பட்ட இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகள் 71 பேருக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரஜாவுரிமை பெற்றவர்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தற்போது வசித்து வருகின்றனர்.
இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் இ.எச்.ஜி. பிரசங்க, ஒபர் சிலோன் நிறுவன தலைவி சி. சூரியகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






