பயங்கரவாதத்தை தடுக்க பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை
இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் 'இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள்' (Targeted Financial Sanctions - TFS) முறையை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் நிதி முறையைப் பாதுகாக்கவும், பயங்கரவாதச் செயல்களை முறியடிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் அல்லது அதனுடன் தொடர்புடைய நிதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளே இவையாகும்.
நிதி மற்றும் நிதி அல்லாத சொத்துக்களை முடக்குதல், வங்கி சேவைகளை கட்டுப்படுத்துதல், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இலங்கையில் இந்தத் தடைகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் 1373 (2001) தீர்மானத்திற்கு இணங்க நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தின் கீழ், 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஒழுங்குவிதிகளின்படி இவை அமல்படுத்தப்படுகின்றன.
ஒரு நபர் அல்லது அமைப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பெயரிடப்பட்டவுடன், அவர்களின் வங்கி கணக்குகள், நிலம், வாகனங்கள், வீடுகள் மற்றும் தங்கம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும் சட்டப்பூர்வமாக முடக்கப்படும். இந்தத் தடைகளை விதிக்கும் அதிகாரம் வெளிவிவகார அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இதனை நடைமுறைப்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் 'தகுதியுள்ள அதிகாரியாக' (Competent Authority) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நலன்களின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன.
நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்யவும், இலங்கையின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் அவசியமானவை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் இது தொடர்பான தகவல்களை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், தகுதியுள்ள அதிகாரியின் அலுவலகத்தினால் புதிய உத்தியோகபூர்வ இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் சொத்து முடக்கல் உத்தரவுகளை பொதுமக்கள் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam