தாய்க்கும், பிறந்து எட்டு நாட்களேயான குழந்தைக்கும் கோவிட் தொற்று உறுதி
காய்ச்சல் காரணமாகத் திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு நாள் குழந்தைக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
மஹதிவுல்வெவ - தெவனிபியவர பகுதியில் வசித்து வரும் 23 வயது தாயாரின் குழந்தைக்குக் காய்ச்சல் காரணமாக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு பெறப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் பிறந்து எட்டு நாட்களான குழந்தைக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் விடயத்துக்குப் பொறுப்பான வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தாயாருடன் வசித்து வந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தொடர்ந்தும் அவரது குடும்பத்தினருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.