வவுனியாவில் மேலும் 69 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் மேலும் 69 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகியுள்ளன.
வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கோவிட் தொற்று 69 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தூக்கில் தொங்கி உயிரிழந்தவர் உட்பட 8 பேர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
அதில் மூவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் வவுனியா - பாரதிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதுடன், வவுனியா முதியவர் காப்பகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் அவர்களது வீடுகளில் வைத்து சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை தனிமைப்படுத்தவும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் மரணித்த எட்டு பேருடைய உடல்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.