நேரியகுளம் பகுதியில் 46 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியா - நேரியகுளம் பகுதியில் 39 பேர் உட்பட 46 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.
அதில், நேரியகுளம் பகுதியில் முப்பத்தொன்பது பேருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் இருவருக்கும், புளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் பகுதியில் ஒருவருக்கும், தரணிக்குளம் பகுதியில் இருவருக்கும் என 46 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் கடந்த இரு நாட்களில் நேரியகுளம் பகுதியில் 54 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.