ஆடைத்தொழிற்சாலையை மூடிவிட்டால் கோவிட்டை கட்டுப்படுத்தி விட முடியாது - சிவநேசதுரை சந்திரகாந்தன்
ஆடைத்தொழிற்சாலையை மூடிவிட முடியும். ஏதோ இதை தடை செய்துவிட்டால் மாத்திரம் கோவிட்டை கட்டுப்படுத்திவிடலாம் என எண்ண வேண்டாம். கோவிட் தொற்றைத் தடுத்துக் கொண்டு பட்டினியும் வராமல் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையாமலும் கவனமாக வெற்றி நடைபோட மக்கள் கவனமாக உணர்ந்து செயற்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
இன்று பலரிடம் இருந்து ஆடைத்தொழிற்சாலையில் இருந்து தொற்று வருகின்றது, முறைப்பாடு வருகின்றது. ஆடைத்தொழிற்சாலையை மூடிவிடமுடியும், அதில் அதிகமான பிள்ளைகள் அதிகமாக பணியாற்றுகின்றார்கள் என்பதற்காக கோவிட் தொற்றாது என்பதற்கல்ல.
இதை எப்படிக் கட்டுப்படுத்தி அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உற்பத்தியை அதிகரித்து வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூடியதைக் கவனமாகக் கையாளமுடியும் என்பதை ஆராயுங்கள். முடிந்தால் பணியாற்றுபவர்களை அவர்களது வீடுகளில் கவனமாகச் சென்று வருவதற்கான சூழ்நிலை ஏற்படுத்த முடியுமானால் அதைச் செய்யவேண்டும். மக்கள் எல்லாவற்றையும் நிறுத்தவேண்டும் என்ற எண்ணமுள்ளவர்கள் நாங்கள்.
ஒட்டுமொத்த நாட்டிலேயும் 40 வீதமான மக்கள் அன்றன்று உழைத்து வாழுகின்ற மக்கள் என்பதனை கருத்தில் கொள்ளாமல் இயங்க முடியாது. பொறுப்பாகச் சிந்தியுங்கள். ஏதோ இதை தடைசெய்து விட்டால் மாத்திரம் கோவிட்டை கட்டுப்படுத்திவிடலாம் என எண்ண வேண்டாம்.
இந்த கோவிட் தொற்றைத் தடுத்துக் கொண்டு, பட்டினியும் வராமல் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையாமலும் கவனமாக வெற்றி நடைபோடவேண்டும் என்கின்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பது எமது கருத்து.
அதற்காகப் பொறுப்பு இல்லாமல் யாரும் இயங்கவேண்டாம். மட்டக்களப்பிலும் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது. கோவிட் தொற்று ஆரம்பக் காலத்தில் ஏற்பட்டபோது மக்கள் அதிக கவனம் செலுத்தினார்கள்.
ஆனால் தற்போது அது குறைவாகவுள்ளது. இருந்தபோதும் இப்போது எல்லாவிதமான தடைகளும் இருக்கும்போது மக்கள் கவனமாக தனித்தனி மனிதராகப் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருக்கவேண்டும்.
உதாரணமாக மருதநகரில் ஒருவருக்குச் சந்தேகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு அறிக்கை வருவதற்கு முன்னர் அவர் அங்கு நடந்த மரணவீட்டில் கலந்து கொண்டார். அதன் காரணமாக அந்த மரணவீட்டில் கலந்துகொண்ட 25 பேருக்குத் தொற்று ஏற்பட்டது.
எனவே ஒரு தனிநபருக்கு எனக்குச் சந்தேகம் வந்திருக்கின்றது, பி.சி.ஆர் எடுத்திருக்கின்றேன், அறிக்கை கிடைக்கும் வரைக்கும் நான் வீட்டுக்குள் இருக்கவேண்டும் என தெரியவேண்டும்.
இப்படியான விடயங்களினால் தற்போது 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்குத் தொற்று பரவியுள்ளதுடன், 25 பேர் மரணமடைந்துள்ளனர். இது விரைவாக அதிகரித்தால் எப்படி கட்டுப்படுத்துவது எனச் சுகாதார பிரிவினருக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் மக்கள் கவனமாக உணர்ந்து செயற்படவேண்டும். கஷ்டம் இருக்கின்றது, வீடுகளில் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, ஏனைய பிரச்சனைகள் வரலாம். இவ்வாறு பல நெருக்கடிகள் இருக்கமுடியும்.
இந்த நெருக்கடிகளைச் சமாளித்துக் கட்டுப்படுத்தினால் மாத்திரம் இதிலிருந்து மீளமுடியும். அரசாங்கம் என்ற அடிப்படையிலே நாங்கள் விரைவாகத் தடுப்பூசி எற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
அதற்கமைய சில நாட்களில் தடுப்பூசி
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற நிர்வாகத்தை இயக்குவதற்குக் கிராமம்
தோறும் இருக்கின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு, உள்ளூராட்சி மன்றங்களுடன்
இணைந்து பணியாற்றுகின்றவர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் போன்ற நேரடியாக
மக்களுடன் கடமையாற்றுகின்றவர்களுக்கும் அடுத்த கட்டமாக வர்த்தகர்கள்,
வியாபாரிகள் போன்றவர்களுக்குத் தடுப்பூசி ஏற்ற முயற்சி எடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.