25 ஆயிரம் ரூபா மக்களை சென்றடைவதில் அரச அதிகாரிகளா முட்டுக்கட்டை..!
டித்வா புயல், மண் சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தின் பின்னர் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினை ஈடு செய்வதற்கு அரசாங்கம் பல்வேறு வகையான உதவித்திட்டங்களை வழங்குவதாக அறிவித்தது.
இதுவரை காலமும் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களுக்கு எந்த அரசாங்கமும் வழங்காத உதவித்திட்டங்களை, மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஏற்ப வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது.
இலட்சக்கணக்கான உயிர்கள்
அது மக்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றது. இழப்புகள் மிகவும் குறைவாக ஏற்பட்ட யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தமிழ் மக்கள் உண்மையிலேயே 3 தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தில் இலட்சக்கணக்கான உயிர்களையும், பல பில்லியன்கள் பெறுமதியான சொத்துக்களையும் இழந்தனர்.

இருப்பினும் அவர்களின் இழப்புகள் எவையும் இதுவரை ஈடுசெய்யப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு இந்த உதவி கிடைத்தமையை அவ்வளவு பெரிய விடயமாக எடுத்து பேச வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் அவர்களது கடந்தகால இழப்புகளை ஈடுசெய்ய எத்தனை பில்லியன்கள் கொடுத்தாலும் அது ஈடாகாது.
"சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வழி விடமாட்டார்" என்பது எமது முன்னோர்கள் கூறிய முதுமொழி. அந்த முதுமொழிக்கு அமைய சில பிரதேச செயலர்களும், கிராம சேவகர்களும் செயற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றதை அவதானிக்க முடிகின்றது.
அரசாங்கமானது மக்களுக்கு கொடுக்கவுள்ள 25 ஆயிரம் ரூபா இழப்பீடு அல்லது உதவித் தொகையை வழங்குவதற்கான தகுதி உடையவர்களை தெரிவு செய்வதற்காக ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டது.
25 ஆயிரம் ரூபா உதவித் தொகை
அந்த சுற்றறிக்கையில் யார் யாரெல்லாம் 25 ஆயிரம் ரூபா உதவித் தொகையை பெறலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த சுற்றறிக்கைக்கு மாறாக சில அரச அதிகாரிகள் செயற்பட்டு மக்களுக்கு கிடைக்கவுள்ள உதவிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற விடயம் அரசல்புரசலாக தெரியவருகிறது.
கல்வீடு உடையவர்களுக்கும், சாதாரண சேதம் ஏற்பட்ட வீடுகளுக்கும், கிராம சேவகர் பதிவு வேறொரு பகுதியில் இருக்கின்ற நிலையில் வேறொரு பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும், மேலும் பல காரணங்களை கூறி அவ்வறான காரணங்களுக்குள் உட்படுகின்றவர்களுக்கும் இவ்வாறான கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட மாட்டாது என்று அரச அதிகாரிகள் கூறி, அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் முட்டுக்கட்டையாக இருக்கின்ற விடயம் தெரியவருகிறது.

இது குறித்து சரியான தெளிவு இல்லாத மக்கள் ஏமாற்றமடைந்தவர்களாக மௌனமாக இருப்பதுவும், விடயம் தெரிந்த மக்கள் அரச அதிகாரிகளுடன் போராடுவதும் என்று பல சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.
25000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக அரசாங்க அதிபரால் யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கும் 06/12/2025 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினுடைய NDRSC/02/04/10 ஆம் இலக்க 2025.12.05 ஆந் திகதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட 2025.11.21 ஆந் திகதி முதல் ஏற்பட்ட பேரிடர் காரணமாக
(i) முற்றிலும் சேதமடைந்த வீடுகள்
(ii) பகுதி சேதமடைந்த வீடுகள்
(iii) வீடுகளுக்கு சேதம் ஏற்படாவிட்டாலும் சிறிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், இவ் ரூபா 25,000.00 உதவித் தொகையினை பெறுவதற்கு தகுதியானது என்ற விடயம் தொடர்பிலும் தங்களது கவனம் ஈர்க்கப்படுகின்றது.
இவ்வாறான வெள்ள அனர்த்த நிலைமைகளின் போது அனைத்து கிராம மட்ட அலுவலர்களும் நேரடியாக பிரிவிற்கு சென்று தரவுகளை பெற்றுக்கொள்வதனை தாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
மக்களுக்கு உதவித் திட்டம்
மேலும் 2025.12.05 ஆந் திகதிய கடிதத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தினை உரிய முறையில் பூர்த்தி செய்து உறுதிப்படுத்திய வகையில் மேற்படி கொடுப்பனவினை வழங்க நடவடிக்கை எடுக்கவும்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவு நிவாரணம் மற்றும் ரூபா 25,000.00 கொடுப்பனவிற்கு தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும்.

உலர் உணவு நிவாரணம் மற்றும் ரூபா 25,000.00 கொடுப்பனவு தொடர்பில் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய செயற்படுவதுடன், குறித்த அலுவலர்களை அழைத்து சரியான தெளிவூட்டலினை வழங்கி ரூபா 25,000.00 கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலினை இற்றைப்படுத்தி உறுதிசெய்து கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் தமிழ் மொழியில் காட்சிப்படுத்தி அதன் மென் பிரதியினை (Soft copy) மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கவும்.
இவ்வாறு அரசாங்க அதிபரால் சகல பிரதேச செயலர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சில அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்தின் அறிவித்தல்களுக்கும், அரசாங்க அதிபரின் அறிவித்தல்களுக்கும் செவி சாய்க்காமல் செயற்படுகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் திட்டம் உரிய வகையில் சென்றடைய வேண்டும் என்ற விடயத்தில் அதிக கரிசினை காட்டுகின்ற அரசாங்கம், பதவியை துஷ்பிரயோகம் செய்கின்ற இவ்வாறான அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்களிடம் சரியாக சென்றடைய வழி வகுக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Kajinthan அவரால் எழுதப்பட்டு, 09 December, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam