சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்கு உட்படுத்த ஆளுநர் பணிப்பு
வட மாகாணத்தில் சுகாதாரத்துறை முறைமைகள் பற்றிய கரிசனைகள் தொடர்பில் வடக்கு ஆளுநரின் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்றைய தினம் (31.07.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், சுகாதார அமைச்சு செயலாளர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மற்றும் வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தனர்.
ஆளுநர் வலியுறுத்தியுள்ள விடயம்
சேவை நாடுவோருக்கான சிகிச்சை, முகாமை மற்றும் புனர்வாழ்வு என்ற விடயங்கள் சுகாதார சேவை நிலையங்களில் ஒரே விதமாக நோக்கப்படலாகாது என்றும் அவை வெவ்வேறான முறைமைகள் ஊடாக அணுகவேண்டியவை என்பதை வலியுறுத்துவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர்களின் விடுப்பு நேர பதிலீடு, உணவு பாதுகாப்பு, வெளிநோயாளிகள் முறையாக மருந்துகளை பெற்றுக் கொண்டு அதனை கிரமமாக உபயோகிப்பதற்கான கண்காணிப்பு, நோயாளர் காவு வண்டிகளின் பராமரிப்பு, சுகாதார சேவைப் பணிமனைகளின் ஊடாக வழங்கப்படும் சேவைகள், உள்ளூராட்சி மன்ற சேவைகளில் சுகாதார சேவை பணிமனைகளின் காத்திரமான ஈடுபாடு என்பன எவ்வளவு வினைத்திறனாக நடைபெறுகின்றது என்பது பற்றியும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களிடம் ஆளுநர் கேட்டறிந்ததுடன் அந்த முறைமைகள் அடிக்கடி மீளாய்வுக்குட்படுத்தி, பொது மக்களுக்கான சேவைகளை வினைத்திறனாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் தூர மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ய நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகளில் சுகாதார நிலைமைகள்
பாடசாலைகளில் சுகாதார நிலைமைகள் பற்றிக் கேட்டறிந்த ஆளுநர், அதிகாரிகள் பாடசாலைகளில் குடிநீர், சுகாதாரம், சுத்தம், ஆரோக்கியம் என்பவற்றில் அதிக கரிசனை கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய போட்டிக்கல்வி முறை உளவியல் ரீதியான பாதிப்புகளை உருவாக்குவது பற்றியும் ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம் தொடர்பாக அறிந்து கொள்வதற்குரிய முறைமைகளை உருவாக்க வேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், பொது மக்களின் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வெவ்வேறு தூறையினரும் இணைந்து செயற்பட்டு தீர்வுகளை காண வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் எடுத்துரைத்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
