அரச ஊழியர்களை அரசாங்கம் வெறுக்குமாக இருந்தால் எதிர்வருகின்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் : ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை
அரச ஊழியர்களை அரசாங்கம் வெறுக்குமாக இருந்தால் எதிர்வருகின்ற தேர்தலில் தபால் மூலமான வாக்களிப்பின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (Gnanamuthu Krishnapillai) தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரச உத்தியோஸ்தர்கள் மிகவும் காத்திரமானவர்கள். அரச பணிகள் சிறக்க வேண்டுமாக இருந்தால் அவர்களது பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிக மிக அவசியமானது.
80 வீதமான அரச உத்தியோகஸ்த்தர்கள் இந்த நாட்டில் பல்வேறு கடன் சுமைகளுக்குள் சிக்குண்டு நாளாந்தம் அல்லல்படுகின்றனர்.
அவர்களுக்கு இந்த அரசாங்கம் கடன் சுமையைக் கொடுத்து இருக்கிறதே தவிர வேறு எந்த நிவாரண சலுகைகளும் அவர்களுக்கு வழங்கவில்லை.
எந்தவொரு அரசாங்கமும் அரசு ஊழியர்கள் இந்த நாட்டிற்கு சுமை என்று கூறியதில்லை. பல்வேறு சுமைகள் அவர்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அரச ஊழியர்களில் 95 வீதமானவர்கள் தங்களது மாதாந்த வேதனத்தை முழுமையாகப் பெறுவதில்லை.
ஏனெனில் அவர்கள் எதைப்பெற வேண்டுமாக இருந்தாலும் வங்கி கடன் மூலமாகவே அதனை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
அது மாத்திரமின்றி அரச ஊழியர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அரசாங்கம் அவர்களுக்கு வெள்ள நிவாரணமோ அல்லது ஏனைய அனர்த்த நிவாரணங்களோ வழங்குவதில்லை.
தற்போதும் இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் கூட அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கவலையளிக்கின்றது.
அத்துடன் ஒரு அரசு உத்தியோகத்தரின் ஓய்வூதிய வயது எல்லை 65 ஆக உயர்த்தப்பட்டிருப்பது அவர்களுடைய நீண்ட கால கனவுகளை சிதறடிக்கும் செயலாகும்.
ஓய்வூதியம் பெறாமலேயே பலர் இயற்கையின் நிமித்தம் மரணித்தால் அச்சலுகை அவர்கள் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
எனவே இந்த அரசாங்கம் அரச சேவை உத்தியோகத்தர்களினுடை நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான சம்பள உயர்வினை வளங்குவதோடு, அவர்கள் நாட்டிற்கு சுமையானவர்கள் எனக் கூறி அவர்களது சேவையினை பலவீனப்படுத்தும் செயற்பாட்டினை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.